ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து, விவாகரத்து கோரி சென்னை, குடும்பநல நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. அதேசமயம் பாடகி கெனிஷா உடன் நெருக்கம் காட்டிய ரவி, அவருடன் திருமண நிகழ்வு ஒன்றில் ஜோடியாக வந்தார்.

இதன்பின் ரவியை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார் ஆர்த்தி. அதில், ‛அப்பா என்பது வார்த்தை அல்ல, பொறுப்பு' என்றார். பதிலுக்கு ரவி, ‛தன்னை பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தனர். அவர்களது கடனுக்கு என்னை உத்திரவாதம் போட சொல்லி கட்டாயப்படுத்தினர்' என அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு ரவியின் மாமியாரும், ஆர்த்தியின் அம்மாவுமான சுஜாதா, ‛‛ரவி சொல்வது பொய், அவரை ஒருபோதும் எனது கடனுக்கு பொறுப்பேற்க சொல்லவில்லை'' என்றார். தொடர்ந்து ஆர்த்தி, ‛எங்களுக்குள் ஏற்பட்ட பிரிவுக்கு எங்கள் வாழ்வில் வந்த மூன்றாவது நபர் தான் காரணம்' என பாடகி கெனிஷாவை விமர்சித்தார்.

இதை வைத்து கெனிஷாவை பலரும் வசை பாடினார். பதிலுக்கு கெனிஷாவும், ‛நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண். எனக்கு கொலை மிரட்டல் வருகிறது' என தெரிவித்தார். இப்படி மாறி மாறி இவர்கள் அறிக்கை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் பொது வெளியில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை ஆர்த்தி, அவரது அம்மா வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரவி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் பொது வெளியில் பரஸ்பரம் அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.