சினிமாவில் எதார்த்தமான கிராமத்து கதைகளுக்கும், நையாண்டி கலந்த நகைச்சுவைகளுக்கும் எப்போதும் தனி மவுசு உண்டு.
அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கியக் காட்சிகள்-ஒன்று ஆன்மீக ரீதியாகவும், மற்றொன்று அரசியல் ரீதியாகவும்-ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
பக்தர்களின் குமுறலும் சர்ச்சையும்
திரைப்படங்களில் மதக் குறியீடுகளையோ அல்லது ஆன்மீகப் பெரியவர்களையோ கேலி செய்வது என்பது சமீபகாலமாக பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. 'தாய் கிழவி' படத்திலும் அதுபோன்ற ஒரு சூழல் உருவாகியுள்ளது.
படத்தில் ஒரு குடிகாரக் கதாபாத்திரம், கருப்புசாமி கோவிலுக்குத் தீபம் ஏற்றி வருபவராகக் காட்டப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை ஒரு சாமியாராக மாற்றிக்கொண்டு, தனக்குத் தானே 'கங்காரு அடிகளார்' என்று பெயரிட்டுக்கொள்வதாகக் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர், மேல்மருவத்தூர் ஆன்மீக குரு மறைந்த பங்காரு அடிகளார் அவர்களின் பெயரைச் சற்று மாற்றியது போல இருப்பதால், அவரது பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒரு குடிகாரக் கதாபாத்திரம் தன்னை மாற்றிக்கொள்ளும்போது இத்தகைய பெயரைப் பயன்படுத்துவது உள்நோக்கம் கொண்டது" என்பது பக்தர்களின் வாதம். எத்தனையோ பெயர்கள் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட ஆன்மீகத் தலைவரை நினைவுபடுத்தும் வகையில் பெயரிடுவது தேவையற்றது என்றும், இது பலருடைய மனதைப் புண்படுத்தும் செயல் என்றும் சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
தியேட்டரை அதிரவைத்த 'தவெக' வசனம்
மறுபுறம், படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு அரசியல் நையாண்டி காட்சி, இளைஞர்களிடையே பயங்கரமான வரவேற்பைப் பெற்றுள்ளது. ராதிகாவின் மகன்களை அறிமுகப்படுத்தும் காட்சி அது.
அதில் ஒவ்வொரு மகனையும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியோடு ஒப்பிட்டு அறிமுகப்படுத்துகிறார்கள்:
"இவர் திமுக..."
"இவர் அதிமுக..."
"இவர் பாஜக..."
இப்படிப் பிரதானக் கட்சிகளின் பெயர்களை வரிசையாகக் கூறிக்கொண்டே வரும்போது, கடைசியாக ஒரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, "இவர் தவெக (தமிழக வெற்றிக் கழகம்)" என்று சொன்னவுடன் தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறது.
குறிப்பாக, நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது கட்சியின் பெயரான 'தவெக' என்பதைப் படத்தில் பயன்படுத்தியிருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் நிலவும் அரசியல் ஆர்வத்தையும், விஜய் மீதான ரசிக மனோபாவத்தையும் அந்த ஒரு நிமிட விசில் சத்தம் உறுதிப்படுத்துகிறது.
தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளை விட அதிகமாக, ஒரு புதிய கட்சிக்குத் திரையரங்கில் கிடைக்கும் இந்த வரவேற்பு, இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு உள்ள செல்வாக்கை காட்டுகிறதா அல்லது ரசிக மனோபாவத்திற்காக விசில் அடித்து என்ஜாய் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா என்பதை தேர்தல் ரிசல்ட் வரும்போது பார்க்க முடியும்.
படைப்புச் சுதந்திரமா? எல்லை மீறலா?
தாய் கிழவி' திரைப்படம் ஒரே நேரத்தில் இரண்டு துருவங்களைத் தொட்டுள்ளது. ஆன்மீக உணர்வுகளைக் கேலி செய்வதாக ஒரு தரப்பினர் கொதிப்பதும், அதே சமயம் சமகால அரசியல் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக இளைஞர்கள் கொண்டாடுவதும் சமகாலச் சினிமாவின் போக்கைக் காட்டுகிறது.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது சமூகத்தின் கண்ணாடியாகவும் இருக்கிறது. ஆனால், அந்தக் கண்ணாடியில் விழும் பிம்பங்கள் யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது. 'கங்காரு அடிகளார்' போன்ற குறியீடுகள் தவிர்த்திருக்கப்பட வேண்டியவை என்றாலும், 'தவெக' போன்ற அரசியல் வசனங்கள் மக்களின் நாடித்துடிப்பை உணர்த்தும் சுவாரசியமான பதிவு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
முடிவாக சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வந்துள்ள இந்தப் படம், தனது கதையினால் மட்டுமல்லாமல், இதுபோன்ற சர்ச்சைக்குரிய மற்றும் சுவாரசியமான காட்சிகளினாலும் மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. ஆன்மீக பக்தர்களின் ஆதங்கம் தணியுமா அல்லது இந்த விவாதம் இன்னும் நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதனிடையே 5வது நாள் பாக்ஸ் ஆபீசில் தாய் கிழவி 19 கோடியே 30 லட்சம் ரூபாய் ஈட்டி சாதித்துள்ளது. படத்தின் பட்ஜெட்டான 10 கோடியை ஒப்பிட்டால் இது டபுள் மடங்கு வசூல்.






.jpg)



.jpg)
.jpg)








