சிவகங்கை மாவட்டத்தில் அஜித் குமார் என்பவரின் லாக்கப் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக ஆட்சியில் சமூகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வந்த நடிகர் சூர்யா இவ்விவகாரத்தில் மௌனம் காப்பதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில், தூத்துக்குடி பென்னிக்ஸ்-ஜெயராஜ் லாக்கப் மரணம் தொடர்பாக சூர்யா, "நாம்தான் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம், மக்களே" என அரசின் மெத்தனத்தை சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அப்போது, சம்பவத்திற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடி மற்றும் பின்னர் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால், தற்போது சிவகங்கையில் நடந்த அஜித் குமாரின் லாக்கப் மரணத்தில், குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் கைது செய்யப்படாமல், வெறுமனே பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு காவலர் செருப்பு அணிந்தாலோ, தாடி வைத்தாலோ கூட பணியிடைநீக்கம் செய்யப்படலாம். ஆனால், ஆறு பேர் ஒருவரை அடித்துக் கொலை செய்ததற்கு வெறும் பணியிடைநீக்கமா?" என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.முதல் தகவல் அறிக்கையில், அஜித் குமார் காவலர்களால் தாக்கப்படவில்லை, மாறாக வலிப்பு காரணமாக உயிரிழந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தாக்குதல் நடந்த இடத்தில் உடைந்த பைப்புகள், மிளகாய்ப் பொடி பாக்கெட், சிறுநீர் கழித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், ஊர் மக்கள் இதனை கண்முன் பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, உண்மையை மறைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.நகை தொலைந்ததாக வந்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்தது சட்டவிரோதமானது எனவும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அதிமுக ஆட்சியில் சமூகப் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சூர்யா, தற்போது இவ்விவகாரத்தில் மௌனம் காப்பதாகவும், மனைவி ஜோதிகாவுடன் சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். "அதிமுக ஆட்சியில் மட்டும்தான் சூர்யாவுக்கு வாய் திறக்கும்? இன்னுமா மிக்சர் திண்ணிட்டு இருக்கார்?" என கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற வேண்டும் எனவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.