மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். கேரள மாநிலம் கோழிக் கோட்டில் பிறந்த இவர், "அனசுவரம்" என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கடந்த 1991 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்.
மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி, ஏராளமான இந்தி மொழி படங்களிலும், தமிழில் "சினேகிதியே", "நான் அவன் இல்லை-2" ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு (2025) நடந்த மலையாள நடிகர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மலையாள நடிகர்கள் சங்க முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் மீது கொச்சியை சேர்ந்த மார்ட்டின் என்பவர் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். அவர் ஆபாச படங்களில் நடித்து பணம் சம்பாதித்ததாகவும், ஆகவே அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் மார்ட்டின் தெரிவித்திருந்தார்.
மலையாள நடிகர்கள் சங்க தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட்ட நேரத்தில் அவரின் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகைக்கு எதிரான அந்த மனுவை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம், நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
நீதிமன்றின் உத்தரவின் பேரில் நடிகை ஸ்வேதா மேனன் மீது தகவல் தொழில் நுட்ப சட்டம் 67(ஏ) உள்பட 2 பிரிவுகளின் கீழ் கொச்சி மத்திய பொலிஸார் வழக்கு பதிந்தனர். இந்தநிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றில் நடிகை ஸ்வேதா மேனன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஸ்வேதா மேனனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூறப்பட்ட புகாரின் மீது அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது.
