விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்து: சோகத்தில் படக்குழு

தற்போது எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‛ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இங்கு படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் விஜய், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். நாளையோடு தனக்கான காட்சிகளை முடித்துவிட்டு கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்ப உள்ளார் விஜய்.

இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள தாண்டிக்குடி என்ற பகுதியில் நேற்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்தப்படும் பெரிய லைட் ஒன்று லைட்மேன் ஒருவரின் தலையில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம். 

இதன்காரணமாக படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்துள்ளார்களாம்.