ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா?

இயக்குநர் ஹரி தனது அடுத்தப் படத்தை தெலுங்கு நடிகர் ரவி தேஜாவை வைத்து இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழின் முன்னணி இயக்குநராக இருந்தவர் ஹரி. இவர் இயக்கிய சாமி, ஆறு, வேல், தாமிரபரணி, சிங்கம், பூஜை போன்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் தோல்வியைத் தழுவியது.

இதனைத் தொடர்ந்து, தனது முதல் படமான ‘தமிழ்’ படத்தின் நாயகனான நடிகர் பிரசாந்தை வைத்து அடுத்தப் படத்தை இயக்குவதாக ஹரி அறிவித்திருந்தார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு பிரசாந்த் பிறந்தநாளன்று வெளியானது.

முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. பின்னர், இதே கதையை அதர்வாவை வைத்து எடுக்க ஹரி திட்டமிட்டதாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு நடிகர் ரவி தேஜாவிடம் ஹரி ஒரு படத்துக்காக கதை சொல்லியிருந்தார். அந்தக் கதை ரவி தேஜாவுக்குப் பிடித்துப் போகவே, ஹரி அடுத்தப் படத்தை ரவி தேஜாவை வைத்து இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாஸ் மசாலா நிறைந்த படமாக இது உருவாகுமென்றும் இதற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Post a Comment