ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடரான மகாபாரதம், மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடரை சித்தார்த் ஆனந்த் குமார், அமர்பிரீத் உள்ளிட்ட 5 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர். ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழ் மொழியில் குரலாக்கம் செய்யப்பட்டு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மகாபாரதம் தொடரில் கிருஷ்ணரின் உபதேசங்கள், துரியோதனன் சபையில் சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்பது, பாஞ்சாலி சபதம் விடுவது, திரெளபதிக்கு கிருஷ்ணர் சேலை கொடுத்து உதவுவது, போர்க்காட்சிகள் உள்ளிட்டவை ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இதனிடையே, மகாபாரதம் தொடரை மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், மகாபாரதம் தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது. வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
பெரும்பாலும், இதிகாசத் தொடருக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், மகாபாரதம் தொடருக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
