விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
தந்தையின்றி நான்கு மகள்களை வளர்க்கும் தாயின் கதையாகத் தொடங்கிய இந்தத் தொடரில் தற்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று, திருமண வாழ்வில் சந்திக்கும் சவால்களை மையமாகக் கொண்டு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் நடிகை லஷ்மி பிரியா நாயகியாகவும், சுவாமிநாதன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும், இந்தத் தொடரில் ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், சுஜாதா சிவகுமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்,
இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்.
2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடர், தற்போது 850 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடரின், படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்தத் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 850 எபிசோடுகளை கடந்து இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வந்தாலும், மகாநதி தொடரைப் பார்ப்பதற்கு என்றே தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு மகாநதி தொடர் நிறைவடையவுள்ளதாக வெளியான தகவல் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
