இயக்குநர் சசி நூறு சாமி படத்திற்காக நடிகை ஸ்வாசிகாவுக்கு விருதுகள் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விஜய் ஆண்டனியும் நடிகை ஸ்வாசிகாவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தின் டீசர் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் சசி, “ஒரு நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அம்மா, மகன் பேசுவதைக் கேட்டு வியந்தேன். அந்த பாதிப்பிலிருந்துதான் இப்படத்தின் கரு உருவானது. நான் இயக்கிய பிச்சைக்காரன் திரைப்படம் அம்மாவைத் தெய்வமாகப் பார்த்தது. நூறு சாமி அம்மாவை மனுஷியாகப் பார்க்கிறது. அவர்களுக்கு உணர்வும் தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அதனைப் பேசும் படமாக இது இருக்கும்.
இப்படத்தில் நடிகை ஸ்வாசிகா முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக அவருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். பிச்சைக்காரன் தெலுங்கிலும் பெரிய ஹிட் அடித்தது. நூறு சாமி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இது, சமூகத்தில் நல்ல தாக்கத்தையும் சில கேள்விகளையும் எழுப்பும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி பேசும்போது, “இப்படத்திற்காக நடிகை ஸ்வாசிகாவுக்கு தேசிய விருது கிடைக்கும்” என்றார்.
