நித்யா மேனனை வைத்து இப்படியொரு படமா.?

 தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் லியோ விஷன் நிறுவனம், தற்போது புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த லியோ விஷன் நிறுவனம், நடிகை நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.

‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இயக்குநர் டி.கே. இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில், நடிகை நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

மேலும், ஃபேண்டஸி மற்றும் டார்க் காமெடி கலந்த வித்தியாசமான ஜானரில் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்திற்கு ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

அதேபோல், இயக்குநர் விக்ரம் கே. குமார் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக இணைந்துள்ளார்.

லியோ விஷன் மற்றும் கேயுரி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம், நித்யா மேனனுக்கு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோல், படத்தின் அதிகாரபூர்வ தலைப்பும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Post a Comment